Tuesday, June 30, 2009

எல்லாரும் ஜாலியா இருக்காங்களா?

"அரவிந்த், படி அம்மா உனக்கு பிடிச்ச முறுக்கு சுட்டுட்டு வரேன்", என்றவாறு அவன் அம்மா அடுப்படிக்குள் நுழைந்தாள்.

அரவிந்த் மெல்ல நழுவி தோட்டத்திற்குச் சென்றான். அங்கு தேனீ ஒன்று ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது தேனீ. "ம்... நான் ஒரு தேனீயா பொறந்திருக்கலாம். ஜாலியா சுத்திட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா பூ பூவா ஓடி தேனை சேகரிச்சு, தேன் கூட்டில் சேர்க்கணும். இதில மனுஷங்க தொல்லை வேற", என்று அலுத்துக் கொண்டது தேனீ. "இந்த தேனீக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

சிட்டுக்குருவி ஒன்று அரிசி கொத்திக் கொண்டு இருந்தது. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று பறந்து வந்தது சிட்டுக்குருவி. "ம்... நான் ஒரு சிட்டுக்குருவியா பொறந்திருக்கலாம். ஜாலியா பறந்துட்டு இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சாப்பிட ஏதாவது கிடைக்குமானு சுத்தணும். இப்ப குஞ்சு பொறிச்சிருக்கேன். அதுகளுக்கும் உணவு எடுத்துப் போகணும். ஓய்வே இல்லை", என்று அலுத்துக் கொண்டது சிட்டுக்குருவி. "இந்த சிட்டுக்குருவிக்கு வேற வேலை இல்ல" என்று எண்ணியவாறு நகர்ந்து சென்றான் அரவிந்த்.

நிழல் பரப்பி இனிய காற்று வீசியவாறு நின்றிருந்தது வேப்பமரம் ஒன்று. அதனடியில் சுகமாக அமர்ந்தான் அரவிந்த். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த். "என்ன சொன்ன? என்ன சொன்ன? என்று கேட்டது மரம். "ம்... நான் ஒரு மரமா பொறந்திருக்கலாம். ஜாலியா தோட்டத்தில் சும்மா இருந்திருப்பேன்", என்றான் அரவிந்த்.

"என்னையா ஜாலியா இருக்கேன்னு சொல்ற? நாள் பூரா சூரிய ஓலியும், நீரும் எடுத்து உணவு தயாரிக்கணும். காற்றுக்கேற்றவாறு கிளைகளை அசைக்கணும். இதில மனுஷங்க வேற வந்து இலையைப் பிடுங்குவாங்க", என்று அலுத்துக் கொண்டது மரம்.

அரவிந்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் யாரெல்லாம் சும்மா ஜாலியாக இருக்கிறார்கள் என்று எண்ணினானோ, எல்லாருமே அவர்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வேலைகளைச் செய்தால் தான் அவர்களால் இருக்க முடியும். "அப்படி என்றால் நானும் என் வேலையைச் செய்ய வேண்டும்" என்று சொல்லிக் கொண்டான் அரவிந்த்.

சமத்தாகப் படித்துக் கொண்டிருந்த அரவிந்தை பார்த்து அவன் அம்மா இன்னும் இரண்டு முறுக்கு சேர்த்துக் கொடுத்தார்கள். நீங்களும் இனிமேல் ஒழுங்கா படிப்பீங்க தானே சுட்டீஸ்? அப்ப தான் அம்மா அப்பா அவங்க வேலையை ஒழுங்கா பார்க்கலாம்.

2 comments:

Admin said...

என்றுதான் உங்கள் வலைப்பக்கம் என் கண்ணில் பட்டது...


வாழ்த்துக்கள் தொடருங்கள்

Admin said...
This comment has been removed by the author.