Wednesday, April 22, 2009

புத்திமான் பலவான்

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் படித்தேன். நல்ல நகைச்சுவையுடன் சிறு சிறு கதைகளும் நல்ல கருத்துகளும் கொண்டிருந்தது புத்தகம். பிரதாப முதலியார் தனது சரித்திரத்தை நகைச்சுவையுடன் நயம்பட கூறியிருப்பார். அதில் நான் இரசித்த பிரதாப முதலியாரின் அனுபவம் ஒன்று என் குழந்தைகளும் இரசித்ததால் "கதை நேரத்தில்" என் மொழியில்....

ஒரு வழிப்போக்கன் ஒரு ஊருக்குள் நுழைந்தான். அவனது செருப்புகள் பிய்ந்து போனதால் அங்குள்ள ஒரு செருப்பு விற்பவனிடம், "நீ எனக்கு செருப்பு தந்தால் நான் உனக்கு சந்தோஷம் தருகிறேன்", என்றான். செருப்பு விற்பவனும் செருப்பு தந்தான். வழிபோக்கன் ஒரு பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிபோக்கன் ஐந்து பணம் தந்தான். செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான்.இப்படியே நூறு பணம் கொடுத்தும் செருப்பு விற்றவன் "சந்தோஷமில்லை" என்றான். வழிப்போக்கன் இதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாது என்றான். ஆனால் செருப்பு விற்பவனோ "நீ எனக்கு சந்தோஷம் தருகிறேன் என்று கூறினாய், எனவே சந்தோஷம் கொடு", என்றான். இருவர் பிரச்னையும் தீராததால் அரசரிடம் செல்ல முடிவெடுத்தார்கள்.

அரசனிடம் போகும் வழியில் சத்திரம் ஒன்றில் தங்கினார்கள். அங்கு சிலர் சீட்டாட்டம்
ஆடினார்கள். சீட்டு ஆடும் பொழுது பந்தயம் வைத்து தோற்றவர் ஜெயித்தவருக்கு பொருள் கொடுக்குமாறும் விளையாடுவர். எனவே வழிப்போக்கன் அவர்களிடம் "என்ன பந்தயம்?" என்று வினவினான். அவர்கள் "சும்மா" என்றார்கள். வழிப்போக்கனும் பந்தயம் இல்லை என்றெண்ணி கொஞ்ச நேரம் விளையாடினான். வழிப்போக்கன் விளையாட்டில் தோற்றுப் போனான். உடனே சத்திரத்துக்காரர்கள் "சும்மா கொடு" என்று அவனைப் பிடித்துக் கொண்டார்கள். எனவே அவர்களும் அவனுடன் அரசரிடம் செல்ல சேர்ந்து கொண்டார்கள்.

போகும் வழியில் ஒரு குடிசையில் இருந்து நல்ல சமையல் வாசனை வந்தது, வழிப்போக்கன் அதன் வாசனையை இரசித்து மூச்சை உள்ளிழுத்தான். உடனே சமையற்காரன் "எனது சமையலை முகர்ந்து உன் வயிற்றை நிரப்பிக் கொண்டாய், எனக்கு பணம் தா" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

போகும் வழியில் குருடன் ஒருவன் வந்து "நேற்று என்னிடம் நல்ல கண்ணைக் கடன் வாங்கி குருட்டுக் கண்ணைக் கொடுத்தாயே, என் நல்ல கண்ணைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான். அது போல் ஒரு முடவனும் ""நேற்று என்னிடம் நல்ல காலைக் கடன் வாங்கி நொண்டிக் காலைக் கொடுத்தாயே, என் நல்ல காலைத் திருப்பிக் கொடு" என்றான். அவனையும் வழிப்போக்கன் சமாதானம் செய்யாததால் அவனும் அரசனிடம் செல்ல சேர்ந்து கொண்டான்.

எல்லோரும் அரசனிடம் வந்தார்கள். அரசன் வழக்கை விசாரித்தான். இந்த விசித்திர வழக்கை காண ஊரில் எல்லோரும் வந்தார்கள். முதலில் அரசன் செருப்பு விற்றவன் வாதத்தைக் கேட்டான். பின் அவனிடம் "நான் அரசனாக இருப்பதில் உனக்கு சந்தோஷமா?" என்றான். செருப்பு விற்றவன் இல்லையென்றா சொல்ல முடியும், "சந்தோஷம்" என்றான். உடனே அரசன் "அந்த சந்தோஷத்தை வைத்துக் கொள் , உனது பிரச்னை முடிந்தது" என்று கூறிவிட்டான்.

அடுத்து சீட்டாட்டக்காரர்களைப் பார்த்து ஒரு குவளையைக் காட்டி "இதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார். அவர்களும் "ஒன்றுமில்லை, சும்மாதான் இருக்கிறது" என்றனர். "சரி, அந்த சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று அரசர் கூறிவிட்டார்.

பின் அவர் சமையற்காரனை விசாரித்தார். வழிப்போக்கனிடம் சில காசுகள் வாங்கி ஒரு பையில் போட்டு குலுக்கினார். சமையற்காரனிடம், "இந்த காசுகளின் சத்தம்தான் உனது சமையலின் வாசனைக்கான தொகை" என்றி தீர்ப்பளித்தார்.

பின் குருடனையும் முடவனையும் விசாரித்தார். குருடனிடம் "உன் குருட்டுக் கண்ணைக் கொடு, அவன் நல்ல கண்ணைத் தருவான்", என்றார். குருடன் "என்னால் என் குருட்டுக்கண்ணை எடுக்க முடியாது" என்றான். அரசர் "நான் எடுக்கவா " என்றார். அவன் "எனக்கு இந்த கண்ணே போதும் என்று கூறிவிட்டான்". இதே போல் முடவனிடமும் "உன் நொண்டி காலைக் கொடு, அவன் நல்ல காலைத் தருவான்" என்று கூற முடவன் "எனக்கு நொண்டி காலே போதும்" என்று கூறிவிட்டான்.

எல்லோரும் அரசனின் புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்தார்கள்; "புத்திமான் பலவான்" என்பது உண்மையே என்று மகிழ்ந்தார்கள்.

ட்ரஷர் ஹண்ட்

குட்டீஸ்க்கு இந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். வயசுக்கு ஏத்த மாதிரி நாம் விளையாட்டு க்ளுஸை வச்சிக்கணும்.

எப்படி விளையாடணும்?
இப்ப நான் சின்ன குழந்தைகளுக்கு ஒரு 3,4 வயசு குழந்தைகளுக்கு எப்படி விளையாடலாம்னு சொல்றேன். அதை அப்படியே மற்ற வயசுக்காரங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும். முதல்ல குழந்தைகள் எல்லாம் வெளியே போகணும். நாலு வெற்றுக்காகிதம் எடுத்துக்கணும். முதல் காகிதத்தில் "டி,வி" வரைங்க. இதைக் கைல வச்சிக்கங்க. இரண்டாவது காகிததில் "தொலைபேசி" வரைங்க. இதை "டி.வி" கீழ் வச்சிடுங்க. மூணாவது காகிதத்தில் "மேசை" வரைங்க. இதை தொலைபேசிக்கு கீழ் வச்சிடுங்க. நாலவது காகிதத்தில் "ஃப்ரிட்ஜ்" வரைங்க. இதை மேசை விரிப்புக்கு கீழ் வச்சிடுங்க. இப்ப ஃப்ரிட்ஜ்க்குள்ளே ஏதாவது பரிசு பொருளோ சாக்லேட்டோ எல்லா சுட்டிகளுக்கும் வச்சிடுங்க.

குழந்தைகளை உள்ளே கூப்பிட்டு, முதல் காகிதத்தைக் காட்டுங்க. அவங்க டி.வி பார்த்து டி.வி கிட்ட போய் அடுத்த காகிதத்தை எடுக்கணும். இப்படி எடுத்து எடுத்து ஃபிரிட்ஜுக்கு வருவாங்க. ட்ரஷரை எடுத்துக்குவாங்க.

இதையே பெரிய குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது க்ளூவை மாத்தலாம். தொலைபேசினு சொல்றதுக்கு பதிலா "ட்ரிங் ட்ரிங்" என்றோ "க்ரஹாம் பெல்" என்றோ ஒரு விடுகதையாகவோ க்ளூ கொடுக்கலாம். இப்படியே எவ்வளவு க்ளூ கொடுக்க முடியுமோ அவ்வளவு நேரம் விளையாடலாம்.

செய்து பாருங்கள். சுட்டிகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த விளையாட்டு.

குண்டு குண்டு செட்டியார்




குண்டு குண்டு செட்டியார்
கொலுவிருக்கும் செட்டியார்
சுண்டல் அள்ளி தின்னுங்கள்
மெல்ல மெல்ல தூங்குங்கள்