Tuesday, June 16, 2009

யாகாவாராயினும் நா காக்க...

அருண் மிகவும் வாயடிக்கும் பையன்; யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை; எதிர்த்து பேசுவான், திட்டுவான், மற்றவர் மனம் நோகப் பேசுவான். ஒரு நாள் அருணை அவனது வகுப்பு ஆசிரியை அழைத்து ஒரு சின்ன பெட்டி நிறைய சிறு ஆணிகளும், ஒரு மரப்பலகையும் கொடுத்தார்கள். நீ யார் மனமேனும் நோகும்படி பேசினால், இதில் ஒரு ஆணி அடித்துவிடு என்றார்கள்.

அருணும் ஆசிரியை சொன்னது வேடிக்கை போல் தோன்றியதால் விளையாட்டாக செய்தான். ஒரே நாளில் அந்த மரப்பலகை முழுக்க ஆணிகள் நிறைந்து விட்டன. அதைப் பார்த்தவுடன் அரூணுக்கு அவமானமாக இருந்தது. தான் எத்தனை மோசமானவனாக இருக்கிறோம் என்றபடி நாவைக் கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்தான். ஒரு நாள் தன் வகுப்பு ஆசிரியையிடம் சென்று "நான் இனிமேல் யார் மனம் நோகும்படியும் பேச மாட்டேன்" என்றான். அவர்களும் மகிழ்ந்தார்கள். இனி நீ யார் மனதையும் நோகடிக்காத நாட்களில் மரப்பலகையில் உள்ள ஆணியை ஒவ்வொன்றாக எடுத்து விடு என்றார்.

அருணும் விரைவிலேயே அந்த மரப்பலகையில் இருந்த ஆணிகள் அனைத்தும் எடுத்துவிட்டான். அதை அவன் ஆசிரியையிடம் சென்று காட்டினான். அவனது ஆசிரியை அவனிடம் "ஆணி எடுத்த பின்பு இந்த மரப்பலகை நான் கொடுத்தாற் போல் உள்ளதா?" என்று வினவினார். அருண் மரப்பலகையைப் பார்த்துவிட்டு "இல்லை அம்மா, அதில் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன" என்றான். "அந்த தடங்களை அழிக்க முடியுமா", ஆசிரியை அவனிடம் கேட்டார். "முடியாது அம்மா", என்றான் அருண். அதற்கு ஆசிரியர் "பார்த்தாயா!!! ஆணி எடுத்த பின்பும் ஆணி பதிந்த தடங்கள் உள்ளன. அது போல் தான் இன்னா சொற்களும். அவை மனதில் நீங்கா துயரை உருவாக்கும். எனவே இனிமேல் இன்னா சொற்கள் பேசக்கூடாது. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார். அருணும் இப்பொழுது இன்னா சொற்களைப் பேசுவதில்லை. கீழ்வரும் குறளுக்கு அவனுக்கு நன்றாகவே பொருள் தெரியும்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

4 comments:

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

இப்படி சொல்லி குடுத்தா நாங்கூட ஒழுங்காப் படிச்சிருந்திருப்பேனோ என்னவோ?

sakthi said...

அருமையான கதை

அமுதா அவர்களே...

அமுதா said...

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஷோபிகண்ணு & சக்தி

Unknown said...

எஸ். ராவின் 'கேள்விகள்' என்ற நூலில் முதன் முதலில் இந்த கதையை வாசிக்க நேர்ந்தது. அங்கு தகப்பன் மகனுக்கு சொல்வது இங்கு ஆசிரியர் மாணவருக்கு சொல்வது போல் வருகிறது. எந்தனை முறை படித்தாலும் இந்த கதையின் அழகு குறைவதே இல்லை.

உங்களுடைய பதிவில் மீண்டும் படித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.