Thursday, February 26, 2009

பாட்டி சொன்ன கதை - 1

எங்கள் மாம்மையிடம் (அம்மாவின் அம்மா) கதை கேட்பது ஒரு இனிய அனுபவம். மாம்மை ஒரு கத சொல்லுங்க என்றால், "நான் பொறந்த கத சொல்லவா, வளந்த கத சொல்லவா, வாழ்ந்த கத சொல்லவா, தாழ்ந்த கத சொல்லவா" என்று மரப்பாச்சி பொம்மை சொன்னதாக கூறி ஆரம்பிக்கும் அழகே தனி.

ஒரு ஊர்ல பொன்னேங்கரதாசி-னு ஒருத்தி இருந்தாளாம். அவ ரொம்ப அழகா இருப்பாளாம், ஆனா ரொம்ப திமிர் பிடிச்சவளாம். அவ ஆட்டத்த பார்க்க ஊர் பெரிய மனுசங்க எல்லாம் பொன்னா கொட்டி கொடுப்பாகளாம். ஒரு நாளு, அவ கடத்தெருவுல போயிட்டு இருக்கறப்ப, குடியானவன் ஒருத்தன் நான் என் கெனால, பொன்னேங்கரதாசிய கண்டேன்னானாம். அவ்வளவு தான், இவ அவன புடிச்சிகிட்டு, என்ன காண எல்லாரும் பொன்னா கொடுக்கறாக, நீ என்னை சும்மா கெனால காணறியானு சொல்லி, இப்பவே எனக்கு நூறு பொன் கொடுன்னு கேக்கறா. எல்லாரும் தெகச்சுப் போய் பார்க்கறாக. அவ கேக்கறது அநியாயம்னு தெரியுது, ஆனா கேள்வி கேக்க ஆளில்ல. அந்த குடியானவன் கொஞ்சம், வெவரமான ஆளு. சரி வா கிளிட்ட நியாயத்தைக் கேப்போம்-னு போறான்.




அந்த ஊர்ல செட்டியார் கடைல ஒரு புத்திசாலி கிளி இருந்தது. ஊர்ல இருக்கறவங்க வழக்க எல்லாம் அதான் அழகா தீர்த்து வைக்கும். அது கிட்ட போய் இவனும் பிரச்னையை சொன்னான். அந்த கிளியும் ரெண்டு பக்கத்து பேச்சையும் கேட்டுச்சு. பொன்னேங்கரதாசி சொல்றது சரி தான். அவளை கெனால கண்டதுக்கு பொன்ன கொடுக்கணும்னு சொல்லுச்சி. பொன்னேங்கரதாசிக்கோ ஒரே சந்தோசம். குடியானவன் தெகச்சுப் போய்ட்டான். அவன் எங்கேனு போவான். அவ்ளோ பொன் இருந்தா அவன் ஏன் இப்படி கஷ்டப்படறான். சரி, இனி கடவுள் விட்ட வழின்னு நெனச்சான். கிளி சொல்லிச்சி, "குடியானவன்ட்ட நூறு பொன்ன வாங்கி அந்த கண்ணாடி முன்னாடி வைங்க, பொன்னேங்கரதாசி அந்த கண்ணாடில இருக்கற பொன்ன எடுத்துக்கட்டும். கெனால கண்ட காட்சிக்கு கண்ணாடில தெரியற பணம் தான் சரி" அப்படின்னுச்சு. எல்லாரும் அந்த கிளி சொன்ன தீர்ப்பு தான் சரின்னு சொன்னங்க.




பொன்னேங்கரதாசிக்கு இப்ப ஒரே கோவம். அந்த கிளிய பாத்து, நான் உன்ன குழம்பு வச்சு சாப்பிடறேனா இல்லயானு பாரு அப்படின்னு சவால் விட்டாளாம். அந்த கிளியும் , நான் உன்ன கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏத்தி ஊர்கோலம் வர வைக்கறேன் பாருன்னுச்சாம். பொன்னேங்கரதாசி அப்படி இப்படி மிரட்டி நெறய காசு கொடுத்து செட்டியார்ட்ட இருந்து கிளிய வாங்கிட்டாளாம். அத கொண்டு வந்து வேலக்காரிட்ட கொடுத்து ருசியா சமைக்க சொல்லிட்டு போய்ட்டாளாம். கிளி, "ஐயோ என் நிலம இப்படி யிடுச்சேன்னு" சொல்லி, தலய தொங்க போட்டுட்டு தொப்புனு மூச்ச அடக்கிட்டு விழுந்திடுச்சாம். வேலக்காரி அது செத்துப்போயிடுச்சினு, ஒரு ஓரமா வச்சிட்டு, அருவாமனைய எடுக்க உள்ள போனாளாம். கிளி பறந்து போய் சிவன் கோயிலுக்குள்ள போயிடுச்சாம்.



அருவாமனைய எடுத்திட்டு வேலக்காரி வந்தா கிளிய காணோம். இத சொன்னா அவ என்ன கொன்னுடுவாளேனு, வேலக்காரி ஒரு கோழிக்குஞ்ச புடிச்சு கொழம்பா வச்சிட்டா. பொன்னேங்கரதாசியும் கிளினு நெனச்சிட்டு, "வெடுக், வெடுக்-னு ஆடற தலய சாப்பிடறேன், பள பள-னு மின்னுற உடம்ப சாப்பிடறேன்னு", ருசிச்சு சாப்பிட்டு தூங்கிட்டா.


மறுநாளு செஞ்ச பாவமெல்லாம் போக்க, சிவன் கோயிலுக்கு போனா. "ஐயா சிவனே, எப்ப எனக்கு உன்ன காட்டப் போற", அப்படின்னு வேண்டினா. அப்ப கர்ப்பகிரகத்தில இருந்து, பொன்னேங்கரதாசி-னு ஒரு குரல் கேட்டுச்சாம். யாரு கூப்பிடறதுனு அவ தெகச்சி போய் பாக்கறா. கர்ப்பகிரகத்தில மறஞ்சு இருந்து கிளி சொல்லுது, "நான் தான் சிவன் பேசறேன். உன் பக்திய நீ காமிச்சா உனக்கு என்ன காட்டறேன்". அவ சொல்லுறா, "சாமி எதுனாலும் சொல்லுங்க நான் செய்யறேன்". "உன்கிட்ட இருக்கற சொத்தெல்லாத்தையும் ஊர்ல ஏழ பாழகளுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா இங்க வா, நான் ஊருக்கு முன்னாடி வந்து உன்ன ஏத்துக்கறேன்", அப்படினு கிளி சொல்லுது.



உடனே பொன்னேங்கரதாசி வீட்டுக்கு போய், குளிச்சு, சொத்தெல்லாம் ஏழைங்களுக்கு கொடுத்துட்டு, மொட்டை அடிச்சி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுத மேல ஏறி ஊர்கோலமா வந்து, சிவனே என்ன ஏத்துக்கப்பான்னாளாம். கிளியும் வெளிய வந்து, நான் சொன்னத செஞ்சிட்டேன்னுச்சாம். எல்லாரும், இந்த திமிர் பிடிச்சவளுக்கு இது தேவை தான்னாங்களாம். பொன்னேங்கரதாசி அவமானம் தாங்காம ஊர விட்டே ஓடிட்டாளாம்.

No comments: